
சென்னை: தமிழகத்தில் உள்ள 2,236 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடிக்கான மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மேற்கு மாம்பலம், மேட்டுப்பாளையம் எத்திராஜ் நகரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மிகப்பெரிய அளவில் மக்களை ஈர்த்திருக்கிறது. ஜூலை 15 முதல் நவ.14-ம் தேதி வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை தமிழகம் முழுவதும் 7,427 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 55.55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை 323 முகாம்கள் நடைபெற்று, 5.45 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.