
தமிழக, கேரள எல்லைப் பகுதியான செங்கோட்டையில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அலங்கார வளைவு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. இங்கு, ரூ.33 லட்சத்தில் புதிய வளைவு கட்டப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியில் இருந்தது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, செங்கோட்டை தாலுகா தமிழகத்தோடு 1956-ம் ஆண்டு இணைந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத் தின் சின்னமான சங்கு வடிவ முத்திரை மற்றும் தலா 5 அடி உயரத்தில் இரு துவார பாலகர்கள் சிலையுடன் கூடிய அலங்கார வளைவு அக்காலத் தில் செங்கோட்டை நகரில் அமைக்கப்பட்டிருந்தது. செங்கோட்டை நகரின் அடையாளமாகவே பல நூறு ஆண்டுகளாக இந்த அலங்கார வளைவு விளங்கி வந்தது.