
சென்னை: தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி கொடுப்போம் என மத்திய அரசு எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் காரசாரமாக வாதிடப்பட்டது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல், குறைவான தொகையை மட்டுமே தமிழக அரசு தங்களுக்கு வழங்குவதாகக்கூறி தனியார் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.