
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரமோற்சவ விழாவின் கருடசேவை 28ஆம் தேதி நடைபெற உள்ளது. கருடசேவையின் மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதற்காக ஸ்ரீ ஆண்டாளுக்கு சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை திருப்பதி புறப்பட்டு சென்றது. முன்னதாக 27 ஆம் தேதி அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும்.
இதனை முன்னிட்டு இன்று காலையில் ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருக்கோயில் யானையான ஜெயமால்யதாவிற்கு அலங்காரங்கள் நடைபெற்றன. அதனையடுத்து திருக்கோயில் வளாகத்திலேயே பிரத்யேக மலர்கள் கொண்டு மாலை மற்றும் கிளி தயாரிக்கப்பட்டு ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிகொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவை திருகோயிலின் சார்பில் ஸ்தானிகர் ஹயக்ரீவாஸ் பெற்றுக்கொண்டு நான்கு மாடவீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று நான்கு சக்கர வாகனம் மூலம் திருப்பதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரைச் சார்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.