
புதுடெல்லி: ‘உக்ரைன் போர் விவகாரத்தில் உங்கள் திட்டம் என்ன?’ என்று ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியதாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் தெரிவித்த கருத்தை இந்திய திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் தொடர்பாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் தெரிவித்த கருத்துகளைப் பார்த்தோம். இந்த அறிக்கை தவறானதும், ஆதாரமற்றதுமாகும். அவர் (மார்க் ரூட்) தெரிவித்ததைப் போல, எப்போதும் பிரதமர் மோடி, அதிபர் புதினிடம் பேசியதில்லை. அத்தகைய உரையாடல் எதுவும் நடக்கவில்லை.