
சண்டிகர்: இந்திய ராணுவத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்த மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்-21 வெறும் ஒரு விமானம் அல்ல; அது இந்தியா – ரஷ்யா இடையேயான ஆழமான உறவின் சான்று என தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தயாரிப்பான மிக்-21 போர் விமானங்கள், இந்திய விமானப்படையின் முதல் சூப்பர்சோனிக் மற்றும் இடைமறிப்பு விமானங்களாக செயல்பட்டன. 1960களின் முற்பகுதியில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட இந்த விமானங்கள், 1965, 1971 ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் நிகழ்ந்த போர்களில் முக்கிய பங்காற்றின. மேலும், 1999 கார்கில் போர், 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றிலும் மிக்-21 போர் விமானங்கள் முக்கியப் பங்காற்றின.