• September 26, 2025
  • NewsEditor
  • 0

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாபூரைச் சேர்ந்தவர் சச்சின். 35 வயதான இவர் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சச்சினுக்கு கடந்த சில தினங்களாக வயிற்றுவலி வந்திருக்கிறது. இதனால் சச்சினை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

அவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, சில பொருள்கள் வயிற்றில் இருந்திருக்கின்றன. உடனே மருத்துவர்கள் எண்டோஸ்கோபி மூலம் எடுக்க முயன்றது தோல்வியடைந்ததால் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிவில், வயிற்றிலிருந்து 29 ஸ்பூன்களும், 19 பல் துலக்கும் பிரஷ்களும், இரண்டு பேனாக்களும் அகற்றப்பட்டன.

வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள்

இது தொடர்பாகப் பேசிய மருத்துவர்கள், “போதைப் பழக்கத்திற்குச் சிகிச்சை பெற்று வந்தபோது, ஏற்பட்ட கோபம் மற்றும் விரக்தியால் ரகசியமாக இந்தப் பொருள்களை உட்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

எண்டோஸ்கோபி மூலம் பொருள்களை அகற்றும் முயற்சிகள் தோல்வியடைந்ததால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து நோயாளி குணமடைந்து வருகிறார்” என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சச்சின், “போதை மறுவாழ்வு முகாமில் நோயாளிகளுக்கு மிகக் குறைந்த உணவு, ஒரு சில சப்பாத்திகள் மட்டுமே வழங்கப்படுகிறது. வீட்டிலிருந்து வரும் சிற்றுண்டிகள் கூட பெரும்பாலும் எங்களுக்கு வருவதில்லை” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *