
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவிடுத்தார்.
செங்கோட்டையனின் இந்தக் கருத்திற்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து செங்கோட்டையனின் கட்சிப்பதவிகள் அதிரடியாகப் பறிக்கப்பட்டன.
இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை செங்கோட்டையன் நேரில் சந்தித்ததாகத் தகவல் வெளியானது. இதற்கு செங்கோட்டையன் விளக்கமும் அளித்திருந்தார்.
அதாவது “சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை. அதேநேரம் என்னிடத்தில் யார் எல்லாம் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை வெளியில் கூற முடியாது” என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று (செப்.26) அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை செங்கோட்டையன் சந்தித்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று (செப்.27) கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
“நான் பல்வேறு விளக்கங்களை அளித்ததற்குப் பிறகும் வேண்டும் என்றே சில வதந்திகளைப் பரப்பி வருவது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.
அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை என்று கூறிவிட்டேன். என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காகத்தான் நான் சென்னைக்குச் சென்றிருந்தேன்.
என்னுடைய சொந்த வேலைகளை முடித்துவிட்டு ஈரோட்டில் துக்க நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்துவிட்டேன்.”

தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். என்னுடைய நோக்கம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும்.
புரட்சித் தலைவி அம்மாவின் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான் செப்டம்பர் 5 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினேன்.
அதன் பிறகு நான் எந்தக் கருத்தையும் யாரிடமும் கலந்து ஆலோசிக்கவோ, அரசியல் ரீதியாக சந்திக்கவோ இல்லை. நான் மீண்டும் ஒருமுறை பதிவு செய்துகொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.