
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பல்வேறு படிப்புகளில் சிறந்து விளங்கிய 304 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி,பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கினார். தாய்மொழிக்கு தேசிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது என்று குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேசினார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழா சென்னையில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் 3,007 இளநிலை, 3,098 முதுநிலை உட்பட 7,972 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில் பதக்கங்களை வென்ற 304 மாணவர்களுக்கு ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கினார். மேலும், ஆசியாவுக்கான காமன்வெல்த் கல்வி ஊடக மையம் விருதை மாணவி திவ்யா பெற்றார்.