
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ – கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்விக்காக தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள பிரத்தியேக திட்டங்கள், சாதனைகள் பற்றிய கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்த்தினராகக் கலந்துகொண்டார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பல அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடன் திரைக்கலைஞர்களும் கலந்துகொண்டனர்.
திருக்குறள் சொன்ன சிவகார்த்திகேயன்
அந்தவகையில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திக்கேயன், “இந்த மாதிரியான நிகழ்ச்சிகள்ல கலந்துகிறது இதுதான் முதல் முறை. நம்ம சினிமா பங்க்ஷன், ஆடியோ லான்ச் பங்க்ஷன் ஏதாவது ஒன்னு பேசிட்டு போயிடலாம். இங்கே அப்படி பேச முடியாது! இங்க நம்ம என்ன பேசுறோங்கற ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு விஷயமும் ரொம்ப ரொம்ப முக்கியம். முதல்ல இந்த விழாக்கு என்ன கூப்பிட்ட துணை முதல்வர் அவர்களுக்கு ரொம்ப ரொம்ப பெரிய நன்றி சார்.
நான் இந்த நிகழ்ச்சிக்கு இந்த திட்டங்களை வாழ்த்துவதற்காகத்தான் வந்தேன். ஆனால் இந்த மேடையில இவங்க எல்லாரும் பேசிய கதைகள், மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன் உண்டு பண்ணி இருக்கு. இங்க இருந்து திரும்ப போகும் போது இன்னும் லைஃப்ல சிறப்பா செய்யனும்னு தோணிக்கிட்டே இருக்கு.
அரசு இவ்வளவு திட்டங்கள் செய்யறது எவ்வளவு நல்ல விஷயமோ, அதே அளவுக்கு ரொம்ப சிறப்பான விஷயம் இவங்க எப்படியாவது படிச்சு நம்ம மேல வந்துரணும்னு நினைக்கிறது.
‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை’ -ன்னு திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இந்த உலகத்தில் எதெல்லாம் பெரிய செல்வம் என்று நினைக்கிறோமோ, அதெல்லாம் விட மிகப்பெரிய செல்வம் கல்வி.
இங்க நிறைய பேரு அவங்களுடைய வாழ்க்கையில பட்ட கஷ்டங்கள், எக்ஸ்பிரியன்ஸ் சொன்னாங்க. சாப்பாட்டுக்கு வந்து கஷ்டமா இருந்தது, போயிட்டு வர பஸ் வசதி இல்ல நடந்து போய் படிச்சோம் அப்படின்னு சொல்லி… நான் மூணு வேளையும் சாப்பிட்டு தான் ஸ்கூலுக்கு போனேன், ஏன்னா எங்க அப்பா ஒரு வேளை சாப்பிட்டு ஸ்கூலுக்கு போய் படிச்சதுனால. நான் ஆட்டோலயும் ரிக்ஷாவையும் ட்ரெயின்லையும் பஸ்லயும் ஸ்கூலுக்கு போனேன், எங்க அப்பா நடந்து ஸ்கூலுக்கு போனதுனால. அதனால, ஒரு தலைமுறைல ஒருத்தர் படிச்சா அதுக்கு அடுத்து வர தலைமுறைகள் எல்லாம் நல்லா இருக்குன்றத நான் என் குடும்பத்தில் பார்த்து இருக்கேன்.
எங்க அப்பா அவங்க வீட்டில் இருந்த வசதிக்கு அவர் நினைச்ச படிப்பை படிக்க முடியல, கிடைச்ச படிப்பு தான் படிச்சாரு. அவர் ஒரு டிகிரி வாங்கினார், ஆனால் அவருடைய பையன் என்ன ரெண்டு டிகிரி படிக்க வச்சாரு. எங்க அக்கா மூன்று டிகிரி முடிச்சிட்டாங்க.
மார்க்குக்காக கொஞ்சம் படிங்க, வாழ்க்கைக்காக நிறைய படிங்க
நான் எம்.பி.ஏ படிச்சதுக்கும் இப்ப வேலைசெய்ற துறைக்கும் சம்பந்தமே இல்ல. ‘நீ படிச்சது வேற, ஆனா நீ நடிச்சிட்டு இருக்கே’ அப்படின்னு நீங்க கேட்கலாம்/ ஆனா நான் நடிச்சிட்டு இருக்கும்போது, இந்த சினிமா இண்டஸ்ட்ரி ரொம்ப ரொம்ப சவால் ஆனது. அதுவும் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் எந்த ஒரு துறைக்குள்ள நுழையிறதே ரொம்ப அசாத்தியமான விஷயம், அப்படி அந்த துறைக்குள்ள அங்க சவால் வரும்பொழுது எல்லாம் எனக்கு இருக்கிற ஒரே தைரியம் என்கிட்ட ரெண்டு டிகிரி இருக்கு. இங்க இருந்து அனுப்பிவிட்டீர்கள் என்றால், ஏதாவது ஒரு வேலை செஞ்சாலும் என்னால பொழச்சிக்க முடியும்.
நிறைய பேருக்கு இங்க கனவுகள் இருக்கு. நான் படிப்பு டீசன்ட்டா படிச்சேன், ஆனா சினிமா மேல ஒரு ஆர்வம். அதனால் இந்த பக்கம் வந்துட்டேன். ஆனா இங்க இருக்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கிறத பார்க்கிறேன். அந்த கனவை நோக்கி நீங்கள் ஓடுவதை கவனிக்கிறேன். உங்களுடைய ஒவ்வொரு கதைகளும் நிறைய பேருக்கு தன்னம்பிக்கை கொடுக்குது. இன்னைக்கு எனக்கு இன்னும் பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்குது.
இந்த திட்டங்களால பயனடையும் அத்தனை மாணவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இத்தனை பேர் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கிற அரசுக்கும், முதல்வர் அவர்களுக்கும், அதிகாரிகள் அனைவருக்கும் என்னுடைய நன்றி, வணக்கங்கள்.
நான் பைனலா ஒன்னே ஒன்னு தான் சொல்றேன், லைஃப்ல நீங்க ஜெயிக்கணுமா, இல்ல சம்பாதிக்கணுமா, வீடு வாங்கணுமா, கார் வாங்கணுமா, இல்ல சக்ஸஸ்ஃபுல்லா இருக்கணுமா, அம்மா அப்பாவை பார்த்துக்கணுமா, எல்லாரும் முன்னாடியும் மரியாதையா இருக்கணுமா, எல்லாருக்கும் சமமா இருக்கணுமா… படிங்க.
மார்க்குக்காக கொஞ்சம் படிங்க, வாழ்க்கைக்காக நிறைய படிங்க. நான் மார்க்குக்காக படிச்சேன் ஆனா வாழ்க்கைக்காக படிச்சேனான்னு தெரியல, அது அனுபவத்துல வருது. நீங்க மார்க்குக்காக படிக்கிற அதே நேரத்துல, வாழ்க்கைக்கு தேவையானதையும் நிறைய படிங்க.
இங்க இருக்குற அத்தனை பேருக்கும் ஒன்னு சொல்ல நினைக்கிறேன், இப்ப நீங்க என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ, அதை தாண்டி ஒன்னு செய்ய முடியும். என்னாலே முடியும் போது, உங்களால் இன்னும் நிறைய முடியும்.
இது மாதிரியான திட்டங்கள் இன்னும் பெரிய சாதனையாளர்களை உருவாக்கும். இது இவங்க பயன் அடையுறது மட்டும் இல்ல, இதை தொடர்ந்து அடுத்து வர நிறைய தலைமுறைகள் இதனால் பயனடையும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை. அந்த சந்தோஷத்தோட என்னுடைய உரையை முடிச்சுக்கிறேன்.”