
தேர்தலுக்குத் தேர்தல் மத அரசியலை மறைமுகமாக பிரதிபலிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓர் ஓட்டுக் கட்டிடத்தை வைத்து மத மோதலுக்கு சிலர் விதை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
திருவிதாங்கூர் மன்னர் பாலரவிவர்மா தனது உறவினர், நண்பர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1941-ல் குமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் ஓட்டு கட்டிடத்தில் காசநோய் மருத்துவமனையை திறந்தார். இதுதான் இப்போது நவீனப்படுத்தப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இருந்த போதும் பழமை மாறாத பழைய ஓட்டு கட்டிடமானது பிறப்பு – இறப்பு பதிவாளர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள சிறிய அறையானது மன்னர் காலத்திலேயே கிறிஸ்தவர்களின் ஜெப அறையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை, ‘கிறிஸ்தவ சிற்றாலயம்` என்றும், இதைத் திறந்து மருத்துவமனைக்கு வரும் கிறிஸ்தவர்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இந்து அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இது தீராத பிரச்சினையாக நீடித்து வருகிறது.