
சென்னை: “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டமாக தெரிவித்துள்ளார்.
கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா, சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அந்தப் புகைப்படத்தை, செந்தில் பாலாஜி தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், ‘தமிழ்நாடு தலைநிமிர, முதல்வர் ஸ்டாலின் தலைமை தேவை என்று உணர்ந்து கரூர் நகர காங்கிரஸ் மகளிரணி தலைவர் கவிதா இன்று தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்’ எனத் தெரிவித்தார். செந்தில் பாலாஜியின் இந்தப் பதிவு காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்தது.