
புதுச்சேரி: குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு தரையில் அமர்ந்து நாராயணசாமி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி நகர பகுதியான உருளையன்பேட்டை தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீரில் கழிவுநீர் கலந்தது. இதை குடித்து வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட பலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு சென்ற சிலர் இறந்துள்ளதாக அந்த பகுதியினர், அரசியல் கட்சியினர் புகார் கூறினர்.
பொதுப்பணித்துறை ஆய்வில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்தது தெரியவந்தது. இதை பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர். இந்த நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் நேற்றைய தினம் கழிவுநீர் குடிநீருடன் கலந்தது. இதில் பாதிக்கப்பட்ட 27-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.