
தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது, பல ஆண்டுகளாகக் கலைக்குச் சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு இன்று (செப். 24) 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கானக் கலைமாமணி விருதுகளை அறிவித்திருக்கிறது.
அந்தவகையில் இன்று அறிவிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பட்டியலில் இயக்குநர் லிங்குசாமி இடம் பிடித்திருக்கிறார்.
கலைமாமணி விருது கிடைத்தது குறித்து இயக்குநர் லிங்குசாமி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர், ” ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தமிழக அரசு சார்பில் இன்று கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு இந்த விருதை அளித்ததற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த கலைமாமணி விருது குறித்து கலைஞர் முரசொலியில் அப்போது ஒரு கட்டுரை எழுதியிருப்பார்.
அதில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதை அன்னையின் ஒரு முத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பார்.
அந்த ஈரம் இன்றும் என் மனதில் இருக்கிறது. இதுவரை என்னுடன் பயணித்த, பணிபுரிந்த எல்லோருக்கும் நன்றி.
உலகத்தில் இருக்கக்கூடிய நிறைய நண்பர்கள் எனக்கு ஃபோனில் அழைத்து வாழ்த்தினார்கள்.
அவர்களின் சந்தோஷத்தை பார்க்கும்போதுதான் இன்னும் உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் வருகிறது.
எனக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்த ஆர்.பி செளத்ரி சார் என எல்லோருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.