
சென்னை: மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டும்போது அந்த பள்ளங்களை சரியாக மூடாமல், சாலையை செப்பனிடாமல் அப்படியே விட்டுச் சென்றால் பாதிக்கப்படும் பொதுமக்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது தாராளமாக போலீஸாரிடம் புகார் அளிக்கலாம் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகம் முழுவதும் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிக்காகவும், மின்வாரியம், கழிவுநீர், கேபிள் உள்ளிட்ட இதர பணிகளுக்காகவும் சாலைகளில் பள்ளம் தோண்டும்போது, அந்த பள்ளங்களை சரிவர மூடி, சாலையை செப்பனிடுவதில்லை. இதனால் வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்க நேரிடுகிறது. சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கிறது.