• September 24, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தாவில் நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை கனமழை பெய்தது. இம்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கனமழையால் நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மின்கசிவு உட்பட பல்வேறு காரணங்களால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் உள்ள பெனியாபுகூர், கலிகாபூர், நேதாஜி நகர், கரியாஹட், எக்பால்பூர், பெஹாலா மற்றும் ஹரிதேவ்பூர் ஆகிய இடங்களில் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன.

நகரில் அதிகமான இடங்களில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. அதோடு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தண்டவாளம், சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் போக்குவரத்தும் முடங்கியது. மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் சில மணி நேரத்தில் இந்த மழை கொட்டித்தீர்த்தது.

கரியா கம்தாஹரியில் 332 மி.மீ மழையும், ஜோத்பூர் பூங்காவில் 285 மி.மீ மழையும், காளிகாட்டில் 280 மி.மீ மழையும், டாப்சியாவில் 275 மி.மீ மழையும், பாலிகங்கேயில் 264 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. கனமழையால் துர்கா பூஜைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விமானங்களின் புறப்பாடு மற்றும் வரத்தும் தாமதமாகி இருக்கிறது. எனவே பயணிகள் விமானத்தின் நிலை குறித்து தெரிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வரும்படி இண்டிகோ, ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

கொல்கத்தா மேயரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிர்ஹாத் ஹக்கீம் மழை குறித்து கூறுகையில், “எனது பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கி இருக்கிறது. நகரில் இப்படி தண்ணீர் தேங்கியதை நான் பார்த்ததில்லை. இது போன்ற சூழ்நிலையை நான் இதுவரை பார்த்ததில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து வருகிறது. மேற்கொண்டு மழை பெய்யாவிட்டால் இன்று இரவுக்குள் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *