
சென்னை: பழங்குடியின மக்களின் மொழிகளை பாதுகாக்க ரூ.3 கோடியில் ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான 3 நாள் ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறை சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. இதனை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்து, கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரசு சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களின் ஓவியம் மற்றும் சிற்பக்கலை படைப்புகளையும், பாரம்பரியமிக்க இசைக்கருவிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: கலை என்பது மக்களுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுடைய கலை வடிவங்களை இளம்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். ஆதிதிராவிட மக்களுடைய நாட்டுப்புற பாடல்கள் எல்லாம், ஒடுக்கப்பட்ட மக்களுடைய விடுதலைக்கான குரல்களாக இருந்திருக்கின்றன. நாட்டுப்புறப் பாடல்களை கேட்டோம் என்றால், சமூகக் கொடுமைகள், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பாற்றிய ஹீரோக்களை அறிந்து கொள்ளலாம்.