
இடாநகர்: அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.5,100 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தில் இரு நீர் மின் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மேலும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் 9,820 அடி உயரத்தில் அதிநவீன மாநாட்டு மையம் அமைக்கவும் அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டில் முதல் சூரியோதயம் அருணாச்சல பிரதேசத்தில் தொடங்குகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மாநில மக்களின் வாழ்க்கையில் விடியல் பிறக்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றது முதல் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறேன். இதன்காரணமாக ஒட்டு மொத்த வடகிழக்கும் அபரிதமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. என்னை பொறுத்தவரை மக்களே கடவுள்.