
சென்னை: தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்கள் அமைய இருப்பது தென் தமிழக வளர்ச்சிக்கு புதியதொரு அடித்தளமாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில், கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க கொச்சின் ஷிப்யார்டு (சிஎஸ்எல்) மற்றும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா தெரிவித்தார்.
இதன்மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ‘கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை சங்கப் பாடல்கள் சொல்லும். தற்போது தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலை பெறும் வகையில் 2 கப்பல் கட்டும் தளங்கள் அமைய உள்ளன. தென் தமிழக வளர்ச்சிக்கு இது அடித்தளமாக அமையும்’ என கூறியுள்ளார்.