
புதுடெல்லி: டெல்லி போலீஸார் அண்மையில் அப்தாப் குரேஷி என்ற தீவிரவாதியை கைது செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் இஸ்லாம் நகரிருள்ள தபாராக் என்ற ஓட்டலில் அண்மையில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் தீவிரவாதி அஷார் டேனிஷ் உட்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த டேனிஷ், போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வரும் இளைஞர் எனத் தெரியவந்தது. ஆனால், இந்த பாழடைந்த ஓட்டலில் 15-ம் எண் அறையில் தங்கியிருந்து வெடிகுண்டுகளை தயார் செய்து வந்துள்ளார் டேனிஷ். இந்த வெடிகுண்டுகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்காக அவர் தயாரித்து வந்துள்ளார். தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் வெடிகுண்டுகளைத் தயாரித்து தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தும் கும்பல் முழுவதும் பிடிபட்டுள்ளது.