
சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின்போது பெண் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதாக, போலீஸார் மீதான குற்றச்சாட்டு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தனது விசாரணையை தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னை மாநகராட்சி 5-வது மற்றும் 6-வது மண்டலத்தில் தூய்மைப் பணிகளுக்கான பொறுப்பை தனியாரிடம் ஒப்படைத்ததை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், உயர் நீதி்மன்ற உத்தரவுப்படி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீஸார் அப்புறப்படுத்தியபோது பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 12 வழக்கறிஞர்களை போலீஸார் தாக்கியதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.