
விருதுநகர்: கடந்த ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம், இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. கருணாநிதியின் கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்று சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கூறினார். விருதுநகர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதியம், வாரிசு வேலை, ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 19-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை 9 ஆண்டுகளுக்குப் பின்னரும் கொடுக்க மனமில்லாமல் இருப்பது நியாயமற்றது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 9 ஆண்டுகளாக பஞ்சப்படி வழங்கப்படவில்லை.