
சென்னை: சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார் உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், வேலூரில் உள்ள காவல் பயிற்சியகத்துக்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி – முத்தாத்தாள் நாச்சியார் தம்பதியரின் மகளாக 1730-ம் ஆண்டு பிறந்தார் வீரமங்கை ராணி வேலுநாச்சியார். 1746-ம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து, சிவகங்கை சமஸ்தானத்தின் ராணியானார். 1772-ம் ஆண்டு ஆங்கிலேயர் சிவகங்கையின் மீது போர் தொடுத்த போது, மன்னர் முத்துவடுகநாதர் வீர மரணமடைந்தார்.