
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
“பக்கத்துவூட்டு ராசப்பன், அப்பன ஆத்தாள ஒதுக்கிட்டு சாந்திதான் வேணுமுன்னு
கட்டிக்கிட்டான். அவங்க மனச நோவடிச்ச பாவமோ என்னமோ ஒரு பொட்டப்புள்ளைய பெத்துபோட்ட சுருக்குல அவளும் போய் சேர்ந்துட்டா.காத்தாட்டம் ஓடிப்போச்சி ஒருவருஷம்!”
வாகாய் கால்நீட்டி அமர்ந்து ஊர்க்கதை பேசும் பொன்னாத்தா அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தாள்.
“அவனுக்குன்னு எடுத்து செய்ய யாருமில்லாம போயிட்டான் இப்ப ராசப்பன். எப்புடி தனி ஆளா நின்னு இந்த கருப்பிய வளத்து ஆளாக்கப்போறானோ தெரியல. எத்தன நாளைக்கு
அக்கம் பக்கம் வூட்டுக்காரங்க கொழந்தையை பார்த்துக்கிடுவாங்கன்னு விட்டுட்டு விட்டுட்டு வேலைக்கு போவான்? சொல்லு!”
வரிசை கட்டி நின்றிருக்கும் ஒண்டுக் குடித்தன வீடுகளில் இருப்பவர்களுக்கு பொன்னாத்தாளின் பேச்சு எரிச்சலூட்டும் ஒன்று. யார் எப்படிப் போனால் எனக்கென்ன என்று இருப்பவர்களுக்கு மத்தியில் மற்றவர் பிரச்னைகளை ஆராயும் அவளை பலரும் தொந்தரவாக நினைப்பதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனால் அங்கு வசிக்கும் கனகா அப்படி இல்லை.
மனசில் கல்மிஷம் இல்லாமல் தனக்கு சரி எனப் படுவதை பட்டென்று பேசிவிடும் பொன்னுவின் குணம் அறிந்தவளாதலால் அவள் பேச்சுக்கு செவிமடுத்து பழக்கப்பட்டவள்.
“கனகா! நீயுந்தான் நாலும் பொட்டையா வெச்சிக்கிட்டு அலச்சல் படுறியே !
பேசாம மூத்தவ கலாவை கட்டி வெச்சிடேன்!” ஏதோ தீர்மானத்துடன் பேசிய பொன்னுவுக்கு,
“ரெண்டாந்தாரமா வாக்கப்பட எம்மக ஒத்துக்கணுமே. கையில புள்ள வேறல்ல இருக்குது!?” கனகாவுக்கு பக்கத்து வீட்டு பொன்னு சொல்வதில் சம்மதம் போல தெரிந்தாலும் மகள் என்ன சொல்வாளோ என்ற குழப்பம்தான்.
“அவளுக்கு நீதான் சொல்லிப் புரியவைக்கணும் கனகா!. அவ என்ன இன்னும் சின்னபுள்ளையா ?
வயசும் முப்பதாக போகுது. உன் புருஷனும் சீக்காளியா கிடக்கான். நீயுந்தான் வந்த நாள்ல இருந்து வருஷத்துக்கு ஒண்ணா பெத்துப்போட்டு மண்ணுக்கு கொடுத்தது போக
மிச்சமிருக்கிறது எல்லாம் பொண்ணா வெச்சிருக்க. ராசப்பனுக்கும் கலா வயசுதான் இருக்கும்.
உம் புள்ளங்கள ஒவ்வொருத்தியா நீதான் சூதானமா கரையேத்தணும்.
இன்னும் நாலுவருஷம் போய்ட்டா உம்பொண்ணு அரை கெழவியாயிடுவா. அப்புறம்
ரெண்டாந்தாரம் கட்டிக்கிட கூட யாரும் வரமாட்டாங்க பாத்துக்கோ.
உம் புருஷன்கிட்ட சொல்லிப் பக்குவமா பேசச்சொல்லு …அவ அங்க போனபின்னாடி
புள்ளய என்ன செய்யணுமோ செஞ்சிக்கலாம். சாந்தி ரதியவா பெத்துபோட்டு போயிருக்குறா?
கருப்பிதான..! ராசப்பன் குப்பவண்டி ஓட்டுறான் ,கெவுருமெண்டு உத்யோகம். சோத்துக்கு பஞ்சமில்லாம
பொழைச்சுக்கலாம்.
இவனை புடிச்சிகிட்டே மத்துங்களையும் கரையேத்திடலாம்.
நான் சொல்றத சொல்லிட்டேன். அப்புறம் உன்பாடு!”
இன்றைக்கே இந்த பிரச்னை முடிந்தாக வேண்டும் என்ற தொணியில் பொன்னாத்தா பேசி முடிக்க,
“கேக்கறதுக்கெல்லாம் நல்லாத்தான் இருக்குதுக்கா!, பக்கத்து வூடு பழகினது இதுக்குத்தான்னு தப்பா நெனைக்கமாட்டானா ராசப்பன்?”
“என்ன கனகா! நீயும் புரியாம பேசுற? பொண்டாட்டி செத்துட்டா புருஷன் புதுமாப்பிள்ளைன்னு
சொலவடை சும்மாவா சொல்லி வெச்சாங்க பெரியவுங்க? யாரு என்ன நெனைச்சா
என்ன? நமக்கு நம்ம வேலை நடக்கணும். அதுக்கெல்லாம் பாத்துக்கிட்டிருந்தா
ஒருத்தியையும் தாட்டமுடியாது பாத்துக்கோ! கலாவை ராசப்பனோட பழகவுடு!புள்ள அழுதிச்சின்னா போய் தூக்கச்சொல்லு. அப்படியே வாய்க்கு ருசியா சோறாக்கி வெக்கச்சொல்லு. அவனும் எத்தன நாளு ஒத்த ஆளா
சமாளிப்பான் சொல்லு. இதையெல்லாம் அவன் சொல்லுவானு பாத்துட்டு இருக்காத. நான் சொல்றத சொல்லிட்டேன். அப்புறம் உன் பாடு.. உன் மக தலையெழுத்து..!” கட்டளை போல் ஒலித்தது பொன்னாத்தாவின் குரல்.
பொன்னாத்தாவின் ஆணைப்படியோ இல்லை கனகாவின் ஆசைப்படியோ ஏதோ ஒன்று, ராசப்பனை மணந்த கலா கருப்பிக்கு சின்னமாவாய் ஆனாள்.
“கருப்பி,, இந்த பாத்திரத்த வௌக்கி தண்ணி புடிச்சி ஊத்து .
கருப்பி எம்புள்ள பீத்துணி அங்க கெடக்குது. அத அலசி காயப்போடு!”
“அம்மா உன்கூட பேசக்கூடாதுன்னு சொல்லிச்சி!” கலாவின் மூன்றுவயது மகள் ஒன்றரை
வயது தம்பியுடன் விளையாடிக்கொண்டே சொன்னாள்.
குழந்தையோடு குழந்தையாய் விளையாடிக் கொண்டிருந்த கருப்பிக்கு எதுவும் பெரிதாக தோன்றவில்லை.
கலாவுக்கு குழந்தைகள் பிறந்ததிலிருந்து ராசப்பன் மூத்த தாரத்து மகள் கருப்பியை சீண்டுவது கிடையாது.
ஏவிய வேலைகளைச் செய்யும் ஒதுக்கப்படாத குப்பையாக வலம் வந்தாள் கருப்பி.
ஒரு மாற்றாந்தாயின் அத்தனை குணநலன்களும் கலாவின் ஒவ்வொரு செயலிலும் நிரூபணமாகிக் கொண்டிருந்தது. வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருந்த ராசப்பனுக்கும் வீட்டில் நடப்பது எதுவும் கண்ணில் படவில்லை.
“அம்மா,எனக்கும் தோசை சுட்டுத்தறியா? தங்கச்சியும்,தம்பியும் மட்டும் சுட சுட தோச திங்கறாங்க. தோச வாசம் நல்லா இருக்கு அம்மா. இன்னிக்கு மட்டுமாச்சும் தோச குடும்மா. எப்பவும் பழையசோறுதானே திங்கறேன்!”
தம்பி, தங்கையின் சாப்பாட்டுத் தட்டை பார்த்திருந்த கருப்பியின் கண்களில் தோசை மீதான கனவு மிளிர்ந்தது.
“யாருடி உனக்கு அம்மா? பெத்தவள முழுங்கிட்டு அம்மாவாம் அம்மா!
என்னை அப்படி கூப்பிடாதன்னு உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்குறேன்.
சூடுவெச்சாலும் திருந்தமாட்ட நீ! உன்ன.. உங்கப்பன் வரட்டும்,,
உன்ன எங்கியாவது கொண்டி வுடச்சொல்றேன்!” முகம் சிவக்க கத்தி ஓய்ந்த கலாவைப் பார்த்து பயத்தில் ஒடுங்கினாள் கருப்பி.
இது நடந்த ஒருசில தினங்களில் அந்த அனாதை ஆசிரமத்தின் புதுவரவாகி நுழைந்தாள் கருப்பி.
அவளுக்கென்று ஏதும் பெயர் வைக்கப்படாததால் கருப்பி என்றே பெயர்
பதியப்பட்டது.
ஆசிரம நிர்வாகியால் பெயர் சூட்டப்பட்டு அவள் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது கருப்பிக்கு வயது ஒன்பது.
“யேய்,,கருப்பி.. உன்னைய தொட்டு நான் பொட்டு வெச்சிக்கிடவா? “
“கருப்பி! என்னைய தொடாத,, நீ தொட்டா நானும் உன்னைய மாதிரியே
கறுப்பாயிடுவேனாம். அப்புறமா யாரும் என்னய கல்யாணம் கட்டிக்கிட மாட்டாங்களாம்!”
கருப்பி… கருப்பி… கருப்பி…, வைத்த பெயர் மறந்து போகுமளவுக்கு மீண்டும் கருப்பி என்றே
விளிக்கப் பட்டாள் வகுப்பறைகளிலும், வெளியிலும்.
தன்னை ஏளனம் செய்தவர்களையெல்லாம்
ஒதுக்கிவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினாள்.
பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேறி பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்தாள்.
ஆசிரம நிர்வாகி அவளின் திறமையைப் பார்த்து வியந்து அவளின் விருப்பம் என்ன என்பதைக் கேட்டு மேற்படிப்பு படிக்கவைத்தார்.
பல்வேறு போராட்டங்களைத் தாண்டி கருப்பி காவல்துறையில் முக்கியப்பணியில் அமர்ந்தாள். வெவ்வேறு பணியிடங்களில் வேலை செய்தவள் தன் சொந்த ஊருக்கு மாறுதல் கேட்டுப் பெற்று வந்தாள்.
அந்த ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக ஆசிரமத்துக்கு சென்றவள்,
ஆசிரம நிர்வாகியை அவரின் அறையில் சந்திக்க காத்திருந்தாள்.
வயதானதினால் பார்வை தடுமாற்றத்துடன் இருந்த அவருக்கு அவளை அடையாளம்
தெரியவில்லை.சீருடையில் வந்ததால் மரியாதை கொடுத்து அவளை
அமரச்சொல்லி, நீங்கள் யார்? என்ன வேண்டும்? என்றார்.
அவள், அவர் தனக்கு சூட்டிய பெயரைக் கூறிட, அப்போதும் அடையாளம் தெரியவில்லை அவருக்கு.
அப்பா..! என்னைத் தெரியலையா !! நான்தான் கருப்பி..!”
பக்,கென்று சிரித்தனர் இருவரும்.
பல கதைகள் பேசிக்கொண்டே தன் கோரிக்கை ஒன்றை அவரிடம் தெரிவித்து
அவர் பதிலுக்கு காத்திருந்தாள்.
தற்போது ஆசிரம நிர்வாகத்தை ஏற்று நடத்திவரும் தன்மகனை அழைத்தவர், ஆசிரமத்தில் புதிதாக வந்திருக்கும் குழந்தைகளை அவள் பார்வையிடச் செய்தார்.
அதோடு, காவல்துறை பணியில் இருக்கும் அவள் கேட்டுக்கொண்ட கோரிக்கையை
நிறைவேற்றும்படி கூறி, அதற்கான எல்லாவித சட்ட நடைமுறைகளையும் சரியான
முறையில் முடித்துத்தரும்படியும் சொல்லி அவளின் மகிழ்ச்சியைக் கண்டு ரசித்தார்.
சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில் ஆசிரமத்திலிருந்து அவளுக்கு போன் வந்தது.
மேடம்! நீங்க கேட்டமாதிரியே உங்களுக்கு புடிச்ச அந்தக் குழந்தையை நீங்க
தத்தெடுத்துக்கலாம்.
எங்கசைடுல எல்லாம் க்ளியர்! ஒருசில ஃபார்மாலிட்டிஸ் இருக்கு. அதை முடிச்சிட்டு சைன் பண்ணிட்டு நீங்க அந்த குழந்தையை அழைச்சிட்டு
போகலாம்.
முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன் தன்னைப்போலவே நிராதரவாக நின்ற ஆறுவயது கறுப்பான
குழந்தையை கூட்டிக்கொண்டு காவலர் குடியிருப்புக்கு வந்தாள்.
இடைப்பட்ட இந்த ஒரு மாதத்தில் அடிக்கடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆசிரமத்திற்கு சென்று அந்தக் குழந்தையோடு நன்றாக பழகிவிட்டிருந்தாள்.
தன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படித்து ,,பதவிபெற்று சாதித்ததைவிட இப்போது அதிகமாக சாதித்ததாக பெருமிதம் கொண்டாள் அவள்.
“பாப்பாவுக்கு பசிக்குதா? சாப்பிடலாமா? என்னவேணும் உனக்கு? சொல்லு. அம்மா செஞ்சு தாறேன்!”
“அப்பா கூட்டிட்டு வந்த புது அம்மா தோசை கேட்டா அடிப்பாங்க. எனக்கு தோசைன்னா ரொம்ப புடிக்கும்.. எனக்கு தோசை தர்றியா?.” மழலை மாறா மொழியில் கேள்வியாக கேட்டது குழந்தை.
கேட்ட நொடியில் கண்களில் கண்ணீர் அருவியாகி கொட்டியது கருப்பிக்கு.
எழுத்தாளர்.
இந்திராணி நாகசுப்ரமணியம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!