
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், நடப்பாண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் ரயில் தண்டவாளத்தை அத்துமீறி கடக்க முயன்றது தொடர்பாக, 944 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் பெரிய கோட்டமாக, சென்னை ரயில்வே கோட்டம் விளங்குகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திரா வரை ரயில்வே எல்லையாகவும், மொத்தம் 697.92 கி.மீ. நீளம் வரை இதன் பாதையாகவும் உள்ளது.
சென்னையில், கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி, கடற்கரை – வேளச்சேரி ஆகிய பிரதான வழித் தடங்களில், தினமும் 630-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை இயக்கப்படுகின்றது. இதுதவிர, 150-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள இவ்வழித் தடங்களில், தண்டவாளத்தை கடக்கும் நபர்கள் சிலர் அவ்வப்போது ரயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவம் நடைபெறுகிறது.