
சென்னை: தொழில் நிறுவனங்கள், ஊழியர்கள் ‘ஸ்ப்ரீ 2025’ திட்டத்தில் இணைவது குறித்த விழிப்புணர்வு முகாம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்தது. தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பதிவை ஊக்குவிக்க ‘ஸ்ப்ரீ -2025’ திட்டத்தை தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐ) தொடங்கியுள்ளது.
இத்திட்டம் குறித்து மாவட்டந்தோறும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (ஏஐஇஎம்ஏ) வளாகத்தில் ‘ஸ்ப்ரீ 2025’ திட்டம் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சென்னை மண்டல இயக்குநர் ஏ.வேணுகோபால் தலைமை தாங்கினார்.