
சௌதி அரேபியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ள Strategic Mutual Defense Agreement-இன் படி, இருநாடுகளும் பாதுகாப்பு விவகாரங்களில் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பை வழங்கும்.
அதாவது ஏதேனும் ஒரு நாட்டை வேறொரு நாடு தாக்கினால் அது இரண்டு நாடுகளையும் தாக்கியதாகவே கருதப்படும்.
பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் நீண்ட காலமாக ராணுவ ஒத்துழைப்புடன் உள்ளன. 1967 முதல், பாகிஸ்தான் 8,200-க்கும் அதிகமான சவுதி ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் பல கூட்டு ராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் அனைத்திலிருந்தும் ஒருபடி மேலே செல்கிறது.
இந்தியா இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தின் பாதுகாப்பில் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும் கனவமாக ஆராய்ந்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அது ஒருபுறமிருக்க, இனி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்படும்போது, சௌதி அரேபியாவின் ராயல் ஏர்ஃபோர்ஸ் விமானங்கள் இந்திய ராணுவத்தைத் தாக்குமா? அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.
இந்தியா – சௌதி அரேபியா உறவு
களத்தில் யதார்த்தம் முற்றிலும் வேறுபட்டது என்கிறனர். இந்த அறிவிப்பு வெளியான நேரமும் அதையே சுட்டிக்காட்டியது. சௌதி அரேபிரயா இந்த ஒப்பந்தம் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுடனும் அல்லது சமபவத்துடன் தொடர்புடையது அல்ல எனக் கூறியுள்ளது.
அத்துடன், “இந்தியாவுடனான எங்கள் உறவு எப்போதுமில்லாத அளவு வலுவானதாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து உறவுகளை வளர்ப்போம், எங்களால் முடிந்த அளவு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்து நாடுகளுக்கும் அழைப்புவிடுப்போம்.” என்றும் கூறியுள்ளது.

சௌதி அரேபியா இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தக கூட்டாளி, இந்தியா சௌதியின் இரண்டாவது பெரிய கூட்டாளி. மறுப்பக்கம் பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான வர்த்தகம் வெறும் 3–4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இது இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சுமார் 10 மடங்கு குறைவு.
பொருளாதார ரீதியில் மட்டுமல்ல சௌதியுடன் சமூக-கலாச்சார உறவுகளையும் பேணுகிறது இந்தியா. இதனால் சௌதி இந்தியாவுக்கு எதிரான மோதலில் களமிறங்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவே. எனில் இந்த ஒப்பந்தம் எந்த நாட்டுக்கு எதிரானது?
கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதலின் விளைவு
இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ள நேரம், இது இஸ்ரேலுக்கான சமிக்ஞை என்பதையே காட்டுகிறது. ஹமாஸ் தலைவர்களைக் கொல்வதற்காக கத்தார் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல், மத்திய கிழக்கு நாடுகளிடையே பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. தொடர்ந்து கத்தாரில் அரபு, இஸ்லாமிய நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றது.
இஸ்ரேல் மேலும் ஒரு இஸ்லாமிய நாட்டைத் தாக்கும் முன்னர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளும் வலியுறுத்தின.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருக்கலாம் என்ற சந்தேகமும் இருப்பதால், அரபு–வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான நீண்டநாள் சார்பு உடைந்துள்ளது.
மேலும், மத்திய கிழக்கில் உள்ள ஒரே அணு ஆயுத சக்தி இஸ்ரேல் மட்டுமே. அணு ஆயுதம் கொண்ட ஒரே இஸ்லாமிய நாடு பாகிஸ்தான் மட்டுமே.
பாகிஸ்தானுடன் இந்த உடன்படிக்கை மூலம், இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் நடத்தும் சூழலில், அணு ஆயுத மிரட்டல் விடுக்கும் சக்தியைப் பெறுகிறது சவுதி அரேபியா.
பாகிஸ்தானுக்கு கூடுதல் தலைவலி?
இதில் மற்றொரு பார்வையையும் முன்வைக்கின்றனர். சௌதிக்கு இஸ்ரேல் குறித்து அச்சம் இருந்தாலும், நீண்ட நாட்களுக்கு பெரும் தொல்லை ஏற்படுத்துவது ஏமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள்தான்.
ஒருவேளை வருங்காலத்தில் ஹௌதிகள் சௌதி அரேபியாவின் பிராந்தியங்களை தாக்கும்போது, ‘ஒரு நாட்டின் மீதான தாக்குதல் இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாகவும் பார்க்கப்படும்’ என்ற அடிப்படையில், பாகிஸ்தான் படைகள் மோதலில் பங்கேற்க நிர்பந்திக்கப்படலாம். இது பாகிஸ்தானுக்கு தேவையற்ற சிக்கலை உருவாக்கும்.

கடந்த 2015ம் ஆண்டு சௌதி அரேபியா ஏமனில் தாக்குதல் நடத்தியபோது, பாகிஸ்தான் தனது படைகளை அனுப்ப மறுத்ததால், இரு நாட்டுகளின் உறவுகளில் கசப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த ஒப்பந்தம் ‘ஒரு நாட்டின் மீதான தாக்குதல் இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாகவும் பார்க்கப்படும்’ என அதிகாரப்பூர்வமாக கூறினாலும், நிஜத்தில் பாகிஸ்தானை விட சௌதி அரேபியாவுக்கு அதிக சாதகமானதாகவும், இந்தியாவை விட இஸ்ரேலுக்கு அதிக கவலை அளிப்பதாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.