
குன்னூர்: வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி முதல்வராக லெப்டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி பொறுப்பேற்றார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி 1905-ல் குவெட்டாவில் நிறுவப்பட்டது. பின்னர் 1947-ல் அது வெலிங்டனுக்கு மாற்றப்பட்டது. இந்தக் கல்லூரி இந்தியாவின் முப்படை அதிகாரிகளுக்கான முன்னணி பயிற்சி நிறுவனமாகும்.
இங்கு, ராணுவம், கடற்படை, விமானப்படை அதிகாரிகளுக்கும், நட்பு நாடுகளின் அதிகாரிகளுக்கும் தலைமைத்துவம், கூட்டாக செயல்படும் திறன், வியூகங்கள் வகுத்தல், பணியாளர் நிர்வாகம் ஆகியவற்றின் உயர் நுணுக்கங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இக்கல்லூரியின் முதல்வராக லெப்டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி நேற்று பொறுப்பேற்றார். இப்பொறுப்பில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், லெப்டினென்ட் ஜெனரல் மணீஷ் எரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.