
‘வாக்குத் திருட்டு’ விவகாரம் குறித்து மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி தனது குழு திரட்டியதாக சில ஆதாரங்களை முன்வைத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மீதும், மத்தியில் ஆளும் பாஜக மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி. ‘இன்றொரு ஹைட்ரஜன் குண்டு வீசப்படும்’ என்று டீஸர் வெளியிட்டு ராகுல் ஆற்றிய உரைக்கு ஆதரவாகவும், அவரைக் கண்டித்தும் கருத்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அது பற்றிய ஒரு விரைவுப் பார்வை…
ராகுல் வெளியிட்ட தகவல்கள்: “வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்து நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறேன். நாடு முழுவதுமே வாக்குத் திருட்டு நடந்துள்ளது. நாங்கள் ஒவ்வொரு மாநிலம் பற்றியும் ஆதாரங்கள் வெளியிடும்போது நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள். அதுவும் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய தொகுதிகள் கண்டறியப்பட்டு வாக்குத் திருட்டு நடந்துள்ளது.