
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பழனிசாமி, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தலைமை உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதையடுத்து, பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதாக ஓபிஎஸ் அறிவித்தார். முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ‘‘அரசியலில் யாரும் எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை" என்று இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார் ஓபிஎஸ்.