
சென்னை எல்லையையும் செய்யாறு சிப்காட்டையும் இணைக்கும் வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் வழியாக 6 வழிச் சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு விவசாயிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், தாம் எதிர்த்த எட்டு வழிச் சாலையை மாற்று பெயரில் திமுக அரசு செயல்படுத்த முயல்வதாக குற்றம் சாட்டினர்.
செய்யாறு சிப்காட்டையும், சென்னையையும் இணைக்கும் வகையில் 6 வழிச் சாலை அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு உள்ளது. இந்த சாலை செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூர் சேந்தமங்கலத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாத்தனஞ்சேரி, சீத்தனஞ்சேரி, பழவேரி, சிறுதாமூர், அருங்குன்றம் ஆகிய பல்வேறு கிராமங்கள் வழியாக செய்யாறு சிப்காட் பகுதிக்கு செல்கிறது.