
தார்: அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பம் மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அந்த அமைப்பைச் சேரந்த முக்கியத் தீவிரவாதி ஒருவர் நேற்று பேசிய நிலையில், அதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி உரை: மத்தியப் பிரதேசத்தின் தார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தில் பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்கள் உள்ளன. இன்று இந்த 4 தூண்கள் தொடர்பான திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. நமது பெண்கள் சக்தி நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளம். தாய் ஆரோக்கியமாக இருந்தால் முழு வீடும் நன்றாக இருக்கும். ஒரு தாய் நோய்வாய்ப்பட்டால், முழு குடும்பத்தின் அமைப்பும் நொறுங்குகிறது. அதனால்தான், ஆரோக்கியமான பெண்கள், வலுவான குடும்பம் எனும் பிரச்சாரம் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.