
மலையாள சினிமாவின் முதல் பேசும் படமான ‘பாலனை’ (1938) இயக்கியவர் எஸ்.நொடானி. இவர் தமிழில் ‘சந்தனதேவன்’, ‘சத்யவாணி’, ‘பக்த கவுரி’, ‘சிவலிங்க சாஷி’ என சில படங்களை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் ஒன்று ‘இன்பவல்லி’. அந்த கால ஃபேன்டஸி படமான இது, ‘ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்’ கதை ஒன்றின் பாதிப்பில் உருவானது.
இளவரசிக்கும் அமைச்சரின் மகனுக்கும் இடையிலான காதல்தான் கதை. இளவரசியும் அமைச்சர் மகனும் ஒன்றாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் காதலில் விழுகிறார்கள். ஆனால் பட்டத்து ராணிக்கு, ஓர் இளவரசனுக்குத்தான் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம். இதை அறியும் காதலர்கள், ஓர் இரவில் அரண்மனையை விட்டு ஓடிவிடுகிறார்கள். இளவரசியின் மீது மோகம் கொண்ட மந்திரவாதி ஒருவன், அமைச்சரின் மகனைத் தனது மந்திர சக்தியால் கண்டுபிடித்து, வைத்துக் கொள்கிறார். ஆனால், வயதான பெண்மணி ஒருவர், அமைச்சரின் மகனைக் கிளியாக மாற்றிக் காப்பாற்றுகிறாள். பறந்து சென்று தப்பிக்கும் கிளி என்ன செய்கிறது, பிறகு காதலர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்கிறது இந்தப் படம்.