
சேலம், கருப்பூர் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட அரசு விழாவில், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் மற்றும் சதாசிவம், இருவரும் திமுக அரசை பாராட்டினர். இதைப்பற்றி மேடையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “போட்டிப் போட்டுக் கொண்டு திமுக அரசை பாராட்டுகிறார்கள், அதே போன்று ஒற்றுமையாக இருந்து பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுங்கள்” என்று பேசியிருந்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்தவுடன் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், அருள் ஆகிய இருவரும் சிரித்து பேசிக்கொண்டனர். இதுகுறித்து அன்புமணி ஆதரவாளரான பாமக மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்திடம் கேட்டபோது, பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.
`எல்லாவற்றையும் உருவாக்கியவர் ராமதாஸ் தான்!’
இதைப்பற்றி ராமதாஸ் ஆதரவாளர் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டியளித்தார். அப்போது அவர், “சேலத்தில் அரசு விழாக்களில் கலந்துகொண்டு தொகுதி சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் கோரிக்கை மனுக்களை கொடுப்பது வழக்கமாக வைத்துள்ளேன். அதேபோன்றுதான் இன்றும் கோரிக்கை மனுவை கொடுத்தேன். பாமக-வில் ஒற்றுமையாக செயல்படுங்கள் என்று துணை முதல்வர் அவருடைய விருப்பத்தை கூறுகிறார். எங்களுக்குள் போட்டி, பொறாமை, சண்டையில்லை. ராமதாஸ் இயக்கத்தை உருவாக்கிய சிற்பி. அதனால்தான் ராமதாஸுடன் இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் சுயவிருப்பத்தை பொறுத்தது. எல்லாவற்றையும் உருவாக்கியவர் ராமதாஸ், எங்களையும் அவர்தான் உருவாக்கினார். ராமதாஸ் எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறாரோ… அந்த கூட்டணி தான் வெற்றிபெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கூட்டணி குறித்து ராமதாஸ் முடிவு செய்வார். துணை முதல்வர் பேசும்போது ஜாலியாக பேசினார். எதற்காக பேசினார் என்று தெரியவில்லை.. என்னை பொறுத்தவரை பாமக கட்சி ராமதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் கட்சி.. வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை… திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடனே தாயாய் பிள்ளையாக பழகுவோம். அவ்வாறு இருக்கும்போது பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் எங்கள் கட்சியை சேர்ந்தவர்.. அப்படி இருக்கும்போது அவருடன் பேசுவது பழகுவதில் எந்த சங்கடமும் இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். நான் நன்றி மறக்காதவன். சிலர் நன்றி மறக்கலாம். என்னுடைய கருத்தை நான் தெரிவித்தேன்.. வழக்கறிஞருடன் பேசும்போது அதன் அடிப்படையில் தகவலை சொல்லி உள்ளேன். என்னுடைய சுயவிருப்பு, வெறுப்பு என்பது எதுவும் இல்லை… ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். சதாசிவம் சொன்னால் அவரது மனைவியும், மகளும் கேட்பார்கள் என்பது எவ்வாறு சொல்ல முடியும். எல்லோரும் ராமதாஸ் தான் தலைவர் என்று நினைக்கும் போது எதுவும் கருத்து கூற முடியாது” என்று தெரிவித்தார்.