
சென்னையில் நேற்று (செப்.16) நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சில பேரைக் கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர்.
கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் ” என்றும், “அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க 18 எம்.எல்.ஏக்களை கடத்திக்கொண்டு சென்றார். அப்படிப்பட்டவர்களையும், கட்சியில் சேர்க்கணுமா? இதையெல்லாம் யார் ஏற்றுக்கொள்வது?” என்று யாரையும் பெயர் குறிப்பிடாமல் பேசியிருந்தார்.
இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான டிடிவி தினகரன் இன்று (செப்.16) தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
“நான் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க முயலவில்லை. தன்மானம்தான் முக்கியம் எனக் கூறிவிட்டு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது ஏன்? செங்கோட்டையனைக் கைக்கூலி என்று கூறுகிறார். அவர் யாரைச் சொல்கிறார்.
எடப்பாடி பழனிசாமி பேசுவதை எல்லாம் பெரிது படுத்த வேண்டாம். தோல்வி பயத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி உளறுகிறார். பழனிசாமி ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக அல்ல. அதிமுக எம்.எல்.ஏக்கள் தான்.
பழனிசாமி நம்பகத்தன்மையற்ற மனிதர் என எல்லோருக்கும் தெரியும். பழனிசாமி படுபாதாளத்துக்குத் தள்ளப்படுவார். அதிமுக தோற்றால் நான் காரணம் அல்ல. உறுதியாக பழனிசாமி இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்.
துரோகத்தை ஏற்றுக்கொண்டு நாங்கள் எப்படி அந்தக் கூட்டணியில் இருக்க முடியும். நான்கு தலைமையில் நான்கு கூட்டணி அமையும். திமுக தலைமையில் ஒரு கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, விஜய் தலைமையில் ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைக்கும் மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

இந்த 4 கூட்டணிகள்தான் தேர்தலில் களம் இறங்கும். அதிமுகவின் 20 சதவீத வாக்குகள் 10 சதவீதமாகக் குறையப் போவது உறுதி. அதிமுக தோற்றால் நான் காரணம் இல்லை. பழனிசாமி படுபாதாளத்துக்குத் தள்ளப்படுவார். அதிமுக கூட்டணிக்கு அமமுக உறுதியாகச் செல்லாது.
பழனிசாமி நம்பகத்தன்மையற்ற மனிதர் என்று அனைவருக்கும் தெரியும். சில நலம் விரும்பிகள் சொன்னதால்தான் நாங்கள் இவ்வளவு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தோம்” என்று பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.