
தாயை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்க, அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகளை சில மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. அந்த வங்கிக்கு தாய்மார்கள் தங்களது குழந்தைக்குப் போக எஞ்சியிருக்கும் பாலைத் தானமாகக் கொடுக்கலாம்.
இந்தியாவைச் சேர்ந்த பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் அவரது கணவரும் நடிகருமான விஷ்ணு விஷாலுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து ஜுவாலா கட்டா தனது குழந்தைக்குப் போக எஞ்சிய தாய்ப்பாலை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கி இருக்கிறார். அவர் கடந்த 4 மாதத்தில் மொத்தம் 30 லிட்டர் தாய்ப்பாலைத் தேவைப்படும் குழந்தைகளுக்குத் தானமாக வழங்கி இருக்கிறார்.
இது குறித்து ஜுவாலா கட்டா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”தாய்ப்பால் உயிர்களைக் காப்பாற்றுகிறது. நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு, நன்கொடையாளர் கொடுக்கும் தாய்ப்பால் அவர்களின் வாழ்க்கையை மாற்றும்.
நீங்கள் தானம் செய்ய முடிந்தால், அது தேவைப்படும் குடும்பத்திற்கு நீங்கள் ஒரு ஹீரோவாக இருக்கலாம். பால் வங்கிகளுக்கு ஆதரவளிக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இச்சேவையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி இருக்கின்றனர். ஒருவர் ஜுவாலா கட்டா பல குழந்தைகளின் தாய் என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், “இது சிறந்த பங்களிப்பு. பலர் இதனை இன்னும் செய்யாமல் இருக்கின்றனர். ஜுவாலா கட்டாவின் பங்களிப்பு பல குழந்தைகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உதவிய ஆமீர் கான்
ஜுவாலா கட்டாவும், விஷ்னு விஷாலும் குழந்தை பெற்றுக்கொள்ள இரண்டு ஆண்டுகள் முயன்றனர். ஆனால் 41 வயதாகும் ஜுவாலாவிற்கு குழந்தை உண்டாகவில்லை. இதையடுத்து செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முயன்றனர்.
அதுவும் 6 முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியாக 7வது முயற்சியில் அவர்களுக்கு மீரா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்காக அவர்கள் மும்பையில் ஆமீர் கான் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள பாலிவுட் நடிகர் ஆமீர் கான் உதவியதாக விஷ்ணு விஷால் குறிப்பிட்டு இருந்தார்.

ஜுவாலா கட்டாவை ஆமீர் கான் மும்பைக்கு அழைத்து 10 மாதம் தங்க வைத்து அவர்களைக் கவனித்துக்கொண்டார். குழந்தை பிறந்த பிறகு பெயர் வைக்க ஆமீர் கான் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். “குழந்தைக்கு மீரா என்று பெயர் வைத்ததும் ஆமீர் கான் தான்” என்று விஷ்ணு விஷால் குறிப்பிட்டு இருந்தார்.
பெயர் சூட்டு விழாவில் ஜுவாலா கட்டா மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். விஷ்ணு விஷாலுக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…