
சென்னை: ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, அண்ணா பிறந்த நாளான நேற்று, திமுக சார்பில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளில், ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களை இணைத்துள்ளது. இதன் முதற்கட்டம் ஜூலை 1 முதல் 70 நாட்களுக்கும் மேல் நடைபெற்று, திமுகவின் 7 லட்சம் தொண்டர்கள் மூலம் 68,000 வாக்குச்சாவடிகளில் உள்ள குடும்பங்களைச் சந்தித்தனர். இந்நிலையில், மாநிலம் முழுவதுமுள்ள 68 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு மூலம் இணைந்தவர்களை ஒன்றுதிரட்டி, உறுதி மொழியேற்கச் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.