
சென்னை: வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தவெக தலைவர் விஜய் சொல்வது மக்கள் மனதில் எப்போதும் நிலைக்காது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அரசு மனநல மருத்துவமனை சார்பில், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று நடந்த “உலக தற்கொலை தடுப்பு வாரம்” நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றார். பின்னர் துண்டு பிரசுரம் விநியோகித்து, விழிப்புணர்வு பதாகை ஏந்தி மனித சங்கிலி நிகழ்வில் பங்கேற்றார்.
இதில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – மருத்துவ கல்லூரி டீன் சாந்தாராம், அரசு மனநல மருத்துவமனை இயக்குநர் மாலையப்பன், மருத்துவர் பூர்ண சந்திரிகா மற்றும் மருத்துவர்கள், செவிலிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.