
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு தெலங்கானா மற்றும் அதையொட்டிய விதர்பா பகுதிகளில் நிலவியது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய விதர்பா மற்றும் அதையொட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (செப். 15) ஓரிரு இடங்களிலும், நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.