
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியபோது பிரான்ஸிடமிருந்து இந்தியா வாங்கிய ரஃபேல் போர் விமானத்தையும் விமானப்படை பயன்படுத்தியது. அப்போது அதன் செயல்பாடு சிறப்பாக இருந்தது.
அதில் உள்ள ஸ்பெக்ட்ரா எலக்ட்ரானிக் சாதனம், பாகிஸ்தான் போர் விமானங்கள் ஏவிய பிஎல்-15 என்ற சீனா தயாரிப்பு ஏவுகணைகளை திசை திருப்பியது. இதனால் ரஃபேல் போர் விமானங்களை மீண்டும் வாங்க விமானப்படை விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் 114 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் தயாரிக்கலாம் எனவும் விமானப்படை கூறியுள்ளது. இதுகுறித்து, பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் வாரியம் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.