
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக. 29-ம் தேதி காலை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதுகுறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், அலட்சியமாகப் பணிபுரிந்த 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக, வட்டாட்சியர் விஜயகுமார் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், திருப்புவனம் போலீஸார் வழக்குப்பதிந்தனர். வட்டாட்சியர்அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், மனுக்களை திருடிய நபரைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.