
மதுரை: மின் வாரியத்தில் 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 10,000 ‘கேங் மேன்’கள் தற்போது வரை வயர்மேன், எலக்ட்ரீஷியன் போன்ற களப்பணி உதவியாளர் பணியிடங்களுக்கு நியமிக்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் விரைவில் தேர்வு செய்யப்படும் 1,794 பேர் களப்பணி உதவியாளராக நியமிக்கப்பட உள்ளதால், ‘கேன்மேன்’களாக பணிபுரிவோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மின்வாரியத்தில் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பராமரிப்பில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மின் வாரிய ஊழியர்களுக்கு மிக அதிகமான பணிச்சுமையும், மக்களுக்குச் சேவைக் குறைபாடும் இருந்து வந்தது. இதனால், மின் வாரியத்தில் ‘கேங்மேன்’ என்ற புதிய பணியிடம் உருவாக்கப்பட்டு அப்பணியிடத்துக்கு ஒப்பந்த, தினக்கூலி பணியாளர்களாக மின்வாரியத்தில் பணிபுரிந்த 15,000 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஐடிஐ முடிக்காததால், மின்வாரிய ‘எலக்ட்ரீஷியன்’, ‘வயர்மேன்’ பணியிடங்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் இருப்பதால் இவர்கள் ‘கேங்மேன்’ ஆக பணி நியமனம் பெற்று அதே பணியிடத்திலே ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.