
சென்னை: சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்துக்காக ரூ.150 கோடியை ஒதுக்கீடு செய்து,மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலத்துக்குட்பட்ட தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைத்தது மாநகராட்சி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் அந்த இரு மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து 13 நாட்களாக மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.14-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.