
திருச்சி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை விமான நிலையம் முதலே தொடரத் தொடங்கினர். காவல்துறை நிபந்தனைகளை எல்லாம் மீறி தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால், விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து செல்கிறது. காலை 10.35 மணிக்கு விஜய் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பிரச்சார இடத்துக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அவர் நிகழ்விடத்துக்குச் செல்லவே இன்னும் பல மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.