
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை, கிட்டத்தட்ட ஆட்சி செய்த நடிகர்களுள் ஒருவர் எம்.ஆர்.ராதா. தனது தனித்துவமான நடிப்பாலும் பேச்சாலும் ரசிகர்களைக் கவர்ந்த அவர், வில்லன், குணசித்திரம் என பிசியாக, படங்களில் நடித்து வந்த நேரம் அது. அப்போது அவர் வில்லனாக நடித்த படங்களில் ஒன்று ‘இந்திரா என் செல்வம்’. நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிரட்டி வந்த அசோகன் கதாநாயகனாக நடித்த படங்களில் ஒன்று இது.
ஒரு குழந்தையைச் சுற்றி நடக்கும் கதை. பிரசவத்தில் தாய் இறந்துவிட, இரக்கம் கொண்ட செவிலியர் ஒருவர் அந்தக் குழந்தையை வளர்க்கிறார். இதற்கிடையே அந்த செவிலியரின் வாழ்க்கையை ஒரு கொடூர மருத்துவர் சீரழிக்கிறார். இதனால் அவள் வேறொரு ஊருக்குச் செல்ல நேரிடுகிறது. குழந்தை, ஒரு பள்ளியில் தாய், தந்தை, யார் என தெரியாமல் அனாதையாக வளர்கிறது. செவிலியரின் காதலன் உதவியுடன் கொடூர மருத்துவரிடம் இருந்து தன்னையும் குழந்தையையும் செவிலியர் எப்படி மீட்கிறார் என்பது கதை.