• September 11, 2025
  • NewsEditor
  • 0

தமிழ் திரையுலகில் இன்று பலரும் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களில் வெகுசிலர் மட்டுமே அதில் வெற்றி கண்டுள்ளனர். அவர்களில் மிகவும் பிரபலமானவர் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் வெற்றி கொண்ட விஜய் ஆண்டனி, நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி, தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும் உலா வருகிறார்.

சக்தி திருமகன்

இவரின் 25-வது படமாக சக்தித் திருமகன் படம் உருவாகியிருக்கிறது. அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு, விஜய் ஆண்டனியின் 25-வது படத்துக்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனியுடன் பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டு உரையாற்றினர்.

இறுதியில் உரையாற்றிய நடிகர் விஜய் ஆண்டனி, “இப்போதுதான் என் முதல் படமான ‘நான்’ படத்தில் நடித்ததுபோல இருக்கிறது. அதற்குள் 25-வது படம் என்கிறார்கள்.

உண்மையில் நான் நடித்திருப்பது 19 – 20 படங்கள்தான் இருக்கும். ஆனால் நான் சின்ன சின்ன ரோல் செய்த படங்களையும் இதில் இணைத்துவிட்டார்கள்.

நான் பலரிடம் அருவி படத்தைப் பற்றி பேசியிருக்கிறேன். ஆனால், அந்த படத்தின் டிரைக்டர் அருண் பிரபுவே எனக்காக ஒரு படத்தைக் கொண்டுவருவார் என எதிர்பார்க்கவே இல்லை.

இயக்குநர் அருண் பிரபு
இயக்குநர் அருண் பிரபு

நடிகர் விஜய் தேவரகொண்டா அருண் பிரபுவிடம் கதை கேட்டதாக சொன்னார்கள். அவர் என்னை சந்திக்க வேண்டும் எனக் கேட்டபோதுகூட விஜய் தேவரகொண்டாவுக்கு பதிலாக எனக்கு மாற்றி மெசெஜ் செய்துவிட்டார் போல என்றுதான் நினைத்தேன்.

இல்லை உங்களுக்காகத்தான் கதை எழுதியிருக்கிறேன் என அவர் கூறினார். அவர் வருவதற்குள் இந்தப் படத்தை நாம்தான் தயாரிக்கிறோம் என முடிவு செய்துவிட்டேன்.

அவர் வந்தபிறகு கூட, என்னுடன் தான் படம் செய்யவேண்டும் என நினைத்தீர்களா? என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டுதான் கதை கேட்டேன்.

முதல்பாதி கேட்டபோதே படம் பிடித்துவிட்டது. தெறிக்கும் அரசியல் வசனங்கள் எல்லாம் வருகிறது. எனக்கு தெரிந்ததெல்லாம் பணக்காரன் – ஏழை என்ற அரசியல்தான். அதனால் இரண்டாவது பாதி கதை எனக்கு புரியவே இல்லை.

சாதி, மத அரசியலெல்லாம் எனக்குத் அவ்வளவாக தெரியாது என்பதால் படம் முழுவதும் நடித்து முடித்துவிட்டேன். அதன்பிறகு படத்தை என் நண்பர்களிடம் போட்டு காண்பித்து, யாரையாவது மறைவாக தாக்கி படம் எடுத்திருக்கிறாரா? எனக் கேட்டேன்.

என் நண்பர்களோ, மறைவாகவெல்லாம் இல்லை… நேரடியாகவே தாக்கி எடுத்திருத்திருக்கிறார் என்றார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

இந்தப் படத்தை எல்லோரும் வெறும் படமாகத்தான் பார்ப்பார்கள். இந்த படத்துக்குப் பிறகு அருண் பிரபுவுடன் இன்னொரு படம் நடிக்கவிருக்கிறேன்.

2026-ல் என் தயாரிப்பு கம்பெனி பப்ளிக் லிமிடெட் கம்பெனியாகவிருக்கிறது. அப்போதுதான் இன்னும் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியும் என நம்புகிறேன்.

எனக்கு அரசியலெல்லாம் தெரியாது. 2026-ல் யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதோ அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். படத்துக்கு உங்களின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்” எனப் பேசினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *