
சென்னை: திடீர் உடல் நலக்குறைவால் உயிருக்குப் போராடிய 2 வயது குழந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றிய சிறப்பு எஸ்ஐ-யை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். திருவொற்றியூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கடந்த 26-ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறைதீர் முகாம் நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட வினோத்குமார் என்பவரது 2 வயது ஆண் குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தும் சரியாகவில்லை. இதை அங்கு பணியிலிருந்த தொற்றுநோய் மருத்துவமனை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ மாரிதுரை கவனித்தார், உடனடியாக அவர் அக்குழந்தையை தூக்கிக் கொண்டு பொதுமக்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் விரைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.