• September 9, 2025
  • NewsEditor
  • 0

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து நண்பன் தர்மராஜிடம் அவதூறாக பேசியிருக்கிறார் விக்னேஷ். 

இதனால், விராட் கோலியின் ரசிகரான தர்மராஜுக்கு இது ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளது. இதன் விளைவு, விக்னேஷை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்திருக்கிறார். 

இந்த வழக்கில், அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருக்கிறது. 

இந்தச் சம்பவம் 2022-ம் ஆண்டு, அக்டோபர் 11-ம் தேதி, அவர்கள் இருவரும் மது அருந்திக் கொண்டிருக்கும் போது நிகழ்ந்திருக்கிறது. 

உயிரிழந்த விக்னேஷ்

இந்தக் கொலை வழக்கை விசாரித்து  தர்மராஜுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக்கொடுத்த காவல்துறை ஆய்வாளர் சகாய அன்பரசு. அவரிடம் நாம் பேசினோம்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “11.10.2022-ல் எங்களுக்குப் புகார் வந்தது. இறந்த விக்னேஷின் வயது 23. சின்ன பையன்தான். வெளிநாடு செல்ல விசாவுக்காகக் காத்திருந்து இருக்கிறான். 

அந்தச் சமயத்தில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

முதலில், எங்களுக்கு பொய்யூர் கிராமத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் விக்னேஷின் உடல் கிடந்ததாகத் தகவல் வந்தது. அது இறந்து கிடந்த விக்னேஷின் அம்மாவின் புகார். அதே ஊரில் வசிக்கும் தர்மராஜ் மீது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது என்றும் கூறினார். 

இரண்டு பேருமே நன்கு படித்தவர்கள்

உடனே, நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தோம். அந்த இடம் முழுவதுமே இரத்தமாக இருந்தது. அங்கே மதுபாட்டில்கள், டம்ளர்கள், வாட்டர் பாட்டில், விக்னேஷின் ஃபோன் எல்லாம் சிதறி கிடந்தது. விக்னேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினோம்.

‘இரண்டு பேருமே நன்கு படித்தவர்கள்தான். தீவிர கிரிக்கெட் ரசிகர்கள். ஐபிஎல்லை தொடர்ச்சியாகப் பார்க்கும் இவர்கள் தினமும் அங்குள்ள கோயிலில் அமர்ந்து கிரிக்கெட் தொடர்பாகப் பேசுவார்கள்.

விக்னேஷ் ரோஹித் ரசிகர். தர்மராஜ் கோலி ரசிகர். சம்பவம் நடந்த சமயத்தில், தொடர்ந்து விராட் கோலி தோற்றுக்கொண்டு இருந்ததால் விக்னேஷ் தர்மராஜை கேலி செய்திருக்கிறார். 

காவல்துறை ஆய்வாளர் சகாய அன்பரசு.
காவல்துறை ஆய்வாளர் சகாய அன்பரசு

விடிய விடிய கிரிக்கெட் பற்றித்தான் பேசி, அது தொடர்பாக இரவு சண்டை போட்டுக்கொண்டாலும், மறுநாள் காலையில் இருவருமே ஒன்றாகத்தான் சுற்றுவார்கள்.

இருவருக்குமே மதுபழக்கம் இருந்துள்ளது. போதையில் பேசிக்கொண்டிருக்கும்போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது’ என்று விசாரணையில் தெரியவந்தது.

பின், விக்னேஷின் நண்பரான தர்மராஜைத் தேடி கைது செய்து விசாரித்தோம். முதலில் தர்மராஜ் உண்மையை ஒப்புகொள்ளவில்லை.

நள்ளிரவில் நடந்த சம்பவம்:

பிறகு விசாரணையில் ஒவ்வொன்றும் தெளிவாக தெரியவந்தது. சம்பவம் நடந்த நாளில், விக்னேஷ் மற்றும் தர்மராஜ் உடன் நான்கு பேர் மது அருந்தி இருந்தனர்.

அப்போதே, தினமும் விக்னேஷ் தர்மராஜை கிண்டல் செய்யும் பழக்கம் இருந்ததால், தர்மராஜ் அவரை கொல்ல திட்டமிட்டிருந்தார்.

அந்த இரவிலும், விக்னேஷை மீண்டும் மது அருந்த அழைத்தார். அப்போது விக்னேஷ் மட்டுமே மது அருந்தியபோல் நடித்தார்; தர்மராஜ் அருந்தவில்லை.

திட்டமிட்டு வந்ததால், தர்மராஜ் பெரிய கிரிக்கெட் பேட்டை ஒளித்து வைத்திருந்தார். விக்னேஷ் போதையானதும், அந்த மறைத்து வைக்கப்பட்ட கிரிக்கெட் பேட்டை எடுத்துக் கொண்டு, விக்னேஷின் பின் மண்டையில் அடித்து கொலை செய்தார்.

கொலை செய்யபட்ட விக்னேஷ்
கொலை செய்யபட்ட விக்னேஷ்

இரவு 8 மணியைப்போல் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பின்னர், தர்மராஜ் வீட்டிற்கு சென்றுவிட்டான். 

யாரும் கொலையைப் பார்க்காததால் இந்த வழக்கைப் பொறுத்தவரை நேரடி சாட்சியங்கள் எதுவும் இல்லை. எல்லாம் சந்தர்ப்ப சாட்சிகள்தான். 

அதனால், தர்மராஜுடன் அன்று காலையில் இருந்த நண்பர்கள், மதுக்கடையில் மது வாங்கியது, அவர்கள் சைட் டிஷ் வாங்கிய பாட்டி, அன்றிரவு அவர்கள் பைக்கில் சென்றதைப் பார்த்தவர்கள், இருவரின் சட்டையில் இருந்த இரத்தம், இருவரும் போனில் பேசிக்கொண்டது என எல்லாவற்றையும் தான் சாட்சியாகக் கொண்டிருந்தேன். அதை வைத்துதான் தர்மராஜை குற்றவாளி என்று முடிவு செய்தோம்.

ஆயுள் தண்டனை

கிரிக்கெட்டின் மோகத்தினால் வந்த வினைதான் இது. தர்மராஜ் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க எல்லா முயற்சிகளையும் செய்தான்.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தான். ஆனால், உள்ளூர் நீதிமன்றத்திலேயே விசாரித்துக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு கொடுத்துவிட்டது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. 

கொலை செய்த தர்மராஜ்
கொலை செய்த தர்மராஜ்

அரியலூர் நீதிமன்றம் ஐபிசி பிரிவு 302 படி ஆயுள் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. வெறும் சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.

இதுவரை  4 வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறேன்” என்று சம்பவத்தை எடுத்து சொன்னார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *