
புதுடெல்லி: கடல் முதல் மலைகள் வரை இந்தியாவின் எல்லைப் பகுதிகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர், பூடான் நாடுகளுடன் இந்தியா எல்லையை பகிர்ந்து கொண்டு உள்ளது. மேலும் இலங்கை, மாலத்தீவு ஆகிய தீவு நாடுகள் இந்தியாவுக்கு அருகே அமைந்துள்ளன. மிக நீண்ட காலமாக சீன, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பிரச்சினை நீடித்து வருகிறது.
எல்லைப் பிரச்சினை தொடர்பாக கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. கடந்த 2017-ம் ஆண்டில் சிக்கிமின் டோக்லாம் பகுதியில் இரு நாடுகள் இடையே 73 நாட்கள் போர் பதற்றம் நீடித்தது. கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.