
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது திருச்சி காவல்துறை வழக்கு பதிவு செய்ததை கண்டித்து, அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி:
கடந்த செப்டம்பர் 6-ம் தேதி, என். ஆனந்த் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் அவரைச் சுற்றி கூட்டம் அதிகரித்ததால், காவலர்கள் பணிகளைச் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் ஆனந்த் தரிசனம் செய்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழக தொண்டர்களின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தவெகவினரின் வாகனங்களை அப்புறப்படுத்தக் கூறியபோது, காவலர்கள் மற்றும் கட்சியினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆனந்த் உட்பட 8 பேர்மீது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவித்தல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் கண்டனம்
தவெகக் கட்சியின் மீதான பயத்தினால் திமுக அரசு, நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த எக்ஸ் தளப் பதிவில் அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அவர்கள்மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

மக்களிடையே செல்வாக்கை இழந்துள்ள தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ, தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருப்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் பிரசாரப் பயணம் என்பது அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான்.
ஆனால், மற்ற கட்சிகளின் இத்தகைய செயல்பாடுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான நடவடிக்கைகளைப் பார்த்தாலே அஞ்சி நடுங்குகிறது.
தோல்வி பயத்தில் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தையே இழந்து, முழு நேரமும் நம்மை வீழ்த்துவதற்கான சதி முயற்சிகளைச் செய்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நமது செயல்பாடுகளைத் தடுக்க நினைக்கிறார்கள்.
அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு.
திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என். ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.